பல்கலை. ஊழல்களை கட்டுப்படுத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் மாற்றம்? ராமதாஸ் எதிர்ப்பு
பல்கலைக்கழக ஊழல்களை கட்டுப்படுத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவாலை இடமாற்றம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: பல்கலைக்கழக ஊழல்களை கட்டுப்படுத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவாலை இடமாற்றம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைள்: உயர்கல்வித் துறை செயலாளராக உள்ள சுனில்பாலிவாலின் கடந்த கால செயல்பாடுகள் விமர்சனத்துக்குரியவை தான் என்றாலும் கூட, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
ஆசிரியர்கள் நியமனம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதில் நடந்த ஊழல்களை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அதன் துணைவேந்தர் கணபதி மீது விசாரணை நடத்த சுனில் பாலிவால் ஆணையிட்டார்.
விசாரணை ஆணையம்
அதேபோல், பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வருகிறார். பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் மீண்டும் அப்பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக வருவதற்கு இந்த விசாரணை தடையாக இருக்கும் என்பதால் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாலிவால் நடவடிக்கை
ஏற்கெனவே 2 முறை துணைவேந்தராக இருந்த அவருக்கு முதல்வரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் ஆதரவாக உள்ளனர். அதேபோல் பல்கலைக்கழகங்களில் கட்டடங்களை கட்டுவது, பிற பொருட்களை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பணிகளில் தான் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடப்பதால் அதைத் தடுக்கும் வகையில் அவை குறித்த துணைவேந்தர்களின் அதிகாரத்தை பறிக்க பாலிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இடமாற்றம் செய்ய முடிவு
கோடிகளை கொட்டிக்கொடுத்து துணைவேந்தரான பலரும் இந்த நடவடிக்கையால் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு விடுமே என்ற அச்சத்தில் பாலிவாலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியதாகவும், அதை பினாமி ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கல்வி வளர்ச்சி முக்கியம்
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையானத் தேவை தரமான கல்வி வழங்குவதாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இரு அதிகாரிகளை மாற்றத்துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். உதயசந்திரனையும், சுனிலையும் இடமாற்றம் செய்வதால் அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, கல்வித்துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.