தமிழகத்தில் மே 21-ந் தேதி நடக்கப்போவது இதுதானாம்... சொல்கிறார் டாக்டர் ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் மே 21-ந் தேதியன்று பாமகவின் அன்புமணி ராமதாஸ்தான் முதல்வராகப் பதவியேற்பார் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செங்குன்றத்தில் நடைபெற்ற பாமகவின் மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர், கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
ஊழலில் சிக்காமல் கொள்ளை அடிப்பவர் கருணாநிதி. ஊழலில் சிக்கி 2 முறை ஜெயிலுக்கு சென்றவர் ஜெயலலிதா. 2ஜி ஊழலில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ஒன்றரை ஆண்டும், தன் மகள் கனிமொழி ஆறு மாதங்களும் திகார் சிறைக்கு அனுப்பி பெயிலில் கொண்டு வந்த பெருமை கருணாநிதியை சாரும்.
பஞ்சபூதங்களின் வகையில் எல்லாம் ஊழல் செய்த தயாநிதி மாறனை அருகில் உட்கார வைத்துக் கொண்டு ஊழலை ஒழிக்கப் போவதாக சொல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும். மதுவால் தமிழகம் சீரழியக் காரணமான திமுக, அதிமுக, கட்சிகள் 234 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் என் ஆசை.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பாமக தான். அன்புமணி முதல்வர் வேட்பாளராக மக்கள் முடிவு செய்து விட்டனர். மே 21-ந் தேதி அன்புமணியை முதல்வராகப் பதவி ஏற்க ஆளுநர் அழைக்கப் போவது உறுதி.