அதிமுக விரைவில் அஸ்தமனம் அடையும்.. ராமதாஸ் ஆருடம் !
தமிழகத்தில் அதிமுக அஸ்தமனம் அடைய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் நலம் பெற வேண்டும், வளர்ச்சியடைய வேண்டுமானால் அதிமுக அஸ்தமனம் அடைய வேண்டும். அது விரைவில் அதுவும் நடக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழத்தில் ஊழல் அல்லாத, வளர்ச்சியை நோக்கிய, கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கக்கூடிய ஆட்சி அமையவேண்டும் என்று விரும்பும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பாமகவில் இணையவேண்டும்.
இந்த அழைப்பு அதிமுக சகோதரர்களுக்கு மட்டும்தான் என்று எவரும் கருதத் தேவையில்லை. ஊழல் ஒழிப்பு, தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொண்ட அனைவரையும் பாமகவில் இணைய வரும்படி அழைக்கிறேன்.
ஊழலை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் அதிமுக ஒரு கட்டத்தில் ஊழல் சுனாமியாக உருவெடுத்தது. ஊழல் என்றால் அதிமுக, அதிமுக என்றால் ஊழல் என்ற அளவுக்கு அதிமுகவின் ஊழல்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.
பிலிப்பைன்ஸ் அதிபரின் மனைவி இமெல்டா மார்கோசை மிஞ்சும் அளவுக்கு ஜெயலலிதா ஊழல் செய்ததுடன், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். இந்தியா ஜனநாயக நாடாக இருந்தாலும் ஜெயலலிதா மட்டும் சர்வாதிகாரியாகவே ஆட்சி செய்தார். ஜெயலலிதாவின் ஊழலும், ஆடம்பரமும் அதிகரிக்க அதிகரிக்க அதே வேகத்தில் தமிழகத்தின் அழிவும் அதிகரித்தது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தமிழகம் நலம் பெற வேண்டும், வளர்ச்சியடைய வேண்டுமானால் தமிழகத்தில் அதிமுக அஸ்தமனம் அடைய வேண்டும். அது விரைவில் அதுவும் நடக்கும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.