மாற்றுத் திறனாளிகளை ஒடுக்குவதை விடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மாற்றுத் திறனாளிகளை ஒடுக்குவதை விடுத்து அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறேவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்; மாத உதவித்தொகையை ரூ.5000 ஆக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகள் மீது காவல் துறையினர் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். காவல்துறையினரின் மனிதாபி மானமற்ற இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
மாற்றுத்திறனாளிகள் முன்வைத்துள்ள 6 அம்சக் கோரிக்கைகள் நியாயமானவை. இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவர் செல்லும் சாலை அருகில் நேற்று போராட்டம் நடத்த முயன்ற அவர்களை காவல்துறையினர் பல இடங்களுக்கு துரத்தியடித்துள்ளனர்.
இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களை சென்னை வேப்பேரியில் காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் அடிப்படை வசதி இல்லாத இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதைக் கண்டித்தும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் அவர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். பலமுறை அச்சுறுத்தல் விடுத்தும் அவர்கள் கலையாததால், அனைவரும் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுத்திறனாளிகளை கிழக்கு கடற்கரை சாலை சுடுகாடு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று இறக்கிவிட்டது போன்ற அணுகுமுறையை மீண்டும் கடைபிடிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அத்தகைய அனுகுமுறையை கைவிட்டு, மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். என்று ராமதாஸ் கூறியுள்ளார்.