ஜெ.படத்தை சட்டசபையில் திறப்பது மறைந்த தலைவர்களுக்கு செய்யும் அவமரியாதை.. ராமதாஸ் பொளேர்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பது மறைந்த தலைவர்களுக்கு செய்யும் அவமரியாதை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பது மறைந்த தலைவர்களுக்கு செய்யும் அவமரியாதை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி துணைப்போகக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்தார். பிரதமரும் வருவதாக உறுதியளித்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் படத்தை வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தைப் பொறுத்தவரை முதலமைச்சராக பணி செய்தவர்கள் அனைவரின் படத்தையும் சட்டப்பேரவைக் கூடத்தில் திறந்து வைத்து மரியாதை செலுத்துவது மரபாக உள்ளது. ஜெயலலிதா நேர்மையான முதலமைச்சராக இருந்திருந்தால் அவரது படத்தை சட்டப்பேரவைக் கூடத்தில் திறப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. ஆனால், ஜெயலலிதா நேர்மையான முதலமைச்சராகவும் இல்லை; பேரவைக் கூடத்தில் படத்தை திறந்து வைக்கும் அளவுக்கு எதையும் சாதிக்கவும் இல்லை. மாறாக முதலமைச்சராக இருந்த போது, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதன் காரணமாக அந்தப் பதவியில் இருந்து இருமுறை தூக்கி எறியப்பட்டவர். சட்டப்பேரவைக்குள் நுழையும் தகுதி இல்லை என்று கூறி 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டவர்.
தவறான முன்னுதாரணம்
2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசின் பதவிக்காலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்கும் போதிலும், இன்றைய நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட அவரால் முதலமைச்சராகவோ, சட்டப்பேரவை உறுப்பினராகவோ இருக்க முடியது. அந்த அளவுக்கு , வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக்குவித்தது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரின் உருவப்படம் பேரவைக் கூடத்தில் திறக்கப்படுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தை ஏற்க முடியாது. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாக ஜெயலலிதா இறந்துவிட்டதால், இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபின்படி ஜெயலலிதா குறித்து எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, ஜெயலலிதா ஊழல் மூலம் குவித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே சசிகலா மற்றும் அவரது உறவினர்களை தமது இல்லத்தில் தங்க வைத்தார் என்று நீதிபதிகள் அவர்களது தீர்ப்பில் கூறியிருப்பதில் இருந்தே ஜெயலலிதா குறித்த உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அரசியமைப்பு சட்டத்துக்கு அவமானம்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் அவற்றை அகற்ற ஆணையிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் விசாரணையை விரைந்து முடிக்க ஒத்துழைக்காத தமிழக அரசு, அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாகவே ஜெயலலிதாவின் உருவப்படத்தை பேரவைக் கூடத்தில் திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இது வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, ஆட்சி அதிகாரத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும்.
பொய்யான வரலாற்றை எழுத முயற்சி
அதிமுகவின் இரு அணிகளையும் மத்திய அரசு கட்டுப்படுத்தி வரும் நிலையில், பாரதிய ஜனதாக் கட்சியின் உண்மையான பினாமி நாங்கள் தான் என்பதை வெளிப்படுத்துவதற்காக இரு அணிகளும் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்காக இரு அணிகளின் தலைமைகளும் தனித்தனியாக விழாக்களை ஏற்பாடு செய்து அதில் பிரதமரை பங்கேற்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இரு அணிகளும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அது அவர்களின் விருப்பம் ஆகும். அதற்காக ஜெயலலிதாவை தியாகியாக்குவதையும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்காக அவர் தான் குரல் கொடுத்தார் என்று பொய்யான வரலாற்றை எழுத முயல்வதையும் ஏற்க முடியாது.
தலைவர்களுக்கு செய்யும் அவமரியாதை
தமிழக சட்டப்பேரவைக் கூடத்தில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காமராஜர், இராஜாஜி, அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இணையாக ஜெயலலிதாவின் படத்தை திறப்பது அந்த தலைவர்களுக்கு செய்யப்படும் அவமரியாதை ஆகும். இந்த முயற்சிக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி துணைப்போகக்கூடாது. தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசும் இப்படி ஒரு வரலாற்றுத் தவறை செய்வதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.