நியாயமாக நடக்குமா? தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலை ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான தேர்தல்களை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல்களும், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலும் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தேர்தலை நடத்தி அரசியலமைப்பு சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆணையத்தின் நோக்கம் சரியானது தான் என்ற போதிலும், இம்முறையாவது தேர்தல் நியாயமாக நடக்குமா? என்ற வினாவும் எழுகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலின்போதே அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முதலில் மே 23-ஆம் தேதிக்கும், பின்னர் ஜூன் 13-ஆம் தேதிக்கும், அதைத் தொடர்ந்து மறுதேதி குறிப்பிடப்படாமலும் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கான காரணம் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்திய வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள், மது ஆகியவற்றை வழங்கியதற்காக 3 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பெருமை இந்த இரு தொகுதிகளுக்கே உண்டு. அவற்றுக்குத் தான் ஆணையம் இப்போது தேர்தல் அறிவித்துள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதற்காக தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள் அதிர்ச்சியளிப்பவை; ஜனநாயகத்தை இப்படியெல்லாம் படுகொலை செய்ய முடியுமா? என்ற வினாவை எழுப்பக்கூடியவை. தேர்தல் ஆணையம் கூறிய அக்காரணங்களை அறிந்து கொண்டால் தான் இரு தேர்தல்களிலும் நடந்த மோசடிகள், முறைகேடுகள் ஆகியவற்றின் முழு பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.