கழகத்தின் கதை: அதிமுக - தொடக்கம் முதல் இன்று வரை - புத்தகம் எழுதிய ராமதாஸ்
கழகத்தின் கதை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இது அதிமுகவின் வரலாறு நூலாம்.
சென்னை: அதிமுகவை பற்றி, கழகத்தின் கதை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இதை சில தினங்களில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவிற்கு தனி வரலாறு உண்டு. திமுகவில் இருந்து விலகி அதே வேகத்தோடு கட்சி ஆரம்பித்து தமிழக முதல்வரானார் எம்ஜிஆர். 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆருக்குப் பின்னர் ஜெயலலிதாவினால் ராணுவக் கட்டுக்கோப்புடன் கட்டிக்காக்கப் பட்ட அதிமுக 1991 முதல் மாறி மாறி ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சிதறிப்போயுள்ளது.
கழகங்கள் அழிந்து விட்டன என்று பாஜக மாநில தலைவர்களே கூறி வருகின்றனர். அதிமுகவை இயக்குவது பாஜகதான் என்று கூறி வரும் இந்த நிலையில் அதிமுகவை பற்றி நூல் எழுதியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
ராமதாஸ் எழுதிய நூல்
அதிமுகவின் தொடக்கம் முதல் இன்று வரையிலான முக்கிய நிகழ்வுகளை இளைய தலைமுறைக்கு விளக்கும் நோக்கத்துடன் ‘கழகத்தின் கதை: அதிமுக - தொடக்கம் முதல் இன்று வரை' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறாராம்.
பெரம்பலூரில் வெளியீடு
கடந்த 45 ஆண்டுகளாக தமிழக அரசியலில் நடந்த அனைத்து திருப்புமுனைகளையும் விளக்கும் இந்த நூல் வரும் ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை பெரம்பலூரில் வெளியிடப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு இந்த நூலை வெளியிடவுள்ளார்.
கொள்கை இல்லாத கட்சி
அதிமுக என்ற இன்னொரு கட்சியைப் பற்றி பாமக நிறுவனர் புத்தகம் எழுத வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டால், சட்டென்று சொல்கிறார் ராமதாஸ். அதிமுக என்பது கொள்கையே இல்லாத, சினிமாக் கவர்ச்சியை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட கட்சி. இன்றளவும் அதே நிலைமை தான் நீடிக்கிறது.
சினிமா கவர்ச்சி
கொள்கை இல்லாத அக்கட்சியால் தமிழக அரசியலில் ஏற்பட்ட பாதிப்புகள், கேலிக்கூத்துக்கள் ஆகியவை குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வதற்கும், கொள்கை சார்ந்த அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வைப்பதற்கும் வசதியாகவே இந்த நூலை எழுதியிருக்கிறேன் என்று தெரிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
இனியும் சினிமா கவர்ச்சியில் மயங்க வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறாரோ ராமதாஸ்