தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்.... டிச.4 முதல் மீனவர்கள் 'ஸ்டிரைக்'
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் அமைப்பு வரும் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம், மீனவர் சங்கத் தலைவர் சந்தியாகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர்கள் அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும், அவர்களுக்குச் சொந்தமான 53 விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி, மீன்பிடி சாதனங்களை கடலில் வீசசி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் இலங்கைக் கடற்படையினரின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின்படி தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு கடலில் மூழ்கும் நிலையில் உள்ள 18 படகுகளை உடனடியாக மீட்க வேண்டும். மேலும் தீ விபத்தில் சேதமான ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை- இந்திய மீனவர்களின் 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும். மேலும், அனைத்து மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.