வாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள்
வாடிவாசலுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வரவேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: வாடிவாசலுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வரவேண்டும் என ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசு கடலில் எல்லைக்கோட்டை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற 22 வயதான தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் கொல்லப்பட்டார்.
சிங்கள கடற்படையின் இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிங்கள கடற்படையின் வெறிச்செயலுக்கு தமிழக மீனவர் பலியானது தமிழக மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் போராட்டம்
சிங்கள கடற்படையின் துப்பாக்கிச்சூட்டால் தமிழக மீனவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உட்பட தமிழகத்தில் உளள அனைத்து இலங்கை நிறுவனங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் போராட்டம்
சிங்கள கடற்பயின் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எல்லைக்கோட்டை அமைக்கனும்
அப்போது பேசிய மீனவர்கள், தாங்கள் பாமரர்கள் எங்களுக்கு எல்லை தெரியாது. கடலில் மத்திய அரசு எல்லைக்கோட்டை அமைக்கவேண்டும்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
நாங்கள் கொள்ளையடிக்கவோ திருடவோ கடலுக்கு செல்லவில்லை. வயிற்று பிழைப்புக்காகத்தான் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம். எங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
மாணவர்கள் முன்வரவேண்டும்
வாடிவாசலுக்காக போராடிய மாணவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன்வர வேண்டும். எங்களின் உயிரை காப்பாற்ற மாணவர்கள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.