இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
மதுரை: ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
இலங்கை கடற்கடையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது. இதன்படி இன்று போராட்டம் தொடங்கியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலைமுதல் தொடங்கியது. வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. இதனால், மீன்பிடி தொழிலை சார்ந்த தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.
சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்கக வேண்டும். இலங்கை வசமுள்ள 115 விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.