சுவாதி உயிரைக் குடித்தது ஒருதலைக்காதலா? - கொலையாளி நெல்லையில் கைது !
சென்னை: பெண் பொறியாளர் சுவாதி படு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ராம்குமார் என்பவரை நெல்லையில் போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலைக்கு ஒருதலைக் காதல் காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இளம்பெண் சுவாதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி மர்மநபர் ஒருவரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியின் உருவம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை சுற்றியிருந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. இதன் அடிப்படையில் அவனது உருவத்தை நவீன தொழிற்நுட்பத்தின் உதவியுடன் காவல்துறையினர் மேம்படுத்தி உருவாக்கி வெளியிட்டனர்.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட 10 தனிப்படை போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். பெங்களூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வைந்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை புகைப்படமாக வெளியிட்டனர். மேலும் சூளைமேடு பகுதியில் வீடு வீடாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நெல்லைக்கு விரைந்தனர்.
இந்நிலையில் கொலை நடந்து 8 நாட்கள் கழித்து செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கிராமத்தில் ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஒருதலைக்காதல்
நெல்லையில் பிடிபட்டுள்ள ராம்குமார், கடந்த 3 மாதமாக சென்னை சூளைமேட்டில் சுவாதி வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மேன்ஷனில் தங்கியிருந்து வேலை தேடி வந்தார். அப்போதுதான் சுவாதியைப் பார்த்து அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். ஆனால் இதை சுவாதி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு சுவாதி, தனது வீட்டின் அருகே உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது வலிய வந்து பேசிய இளைஞரிடம் சுவாதி பேசாமல் நழுவிச் சென்றுள்ளார். அந்த நபர், சுவாதியிடம் விடாமல் சென்று பேசினாராம்.
இந்தத் தகவலறிந்த போலீஸார், பூசாரியிடமும் அந்த நபர் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தனர். மே 10ஆம் தேதி, ஒரு நபர் தன்னை பின் தொடர்ந்து வந்ததாக சுவாதி கூறியதாக அவர் தந்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சுவாதியை கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக கொலையாளியை போலீசார் செங்கோட்டை அருகே கைது செய்தனர். ராம்குமார் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை சென்னை அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.