அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் உயரிய பண்புகளை வெளிப்படுத்துவது ரம்ஜான்: ஸ்டாலின்
ரம்ஜான் பண்டியையொட்டி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
சென்னை: அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் உயரிய பண்புகளை வெளிப்படுத்துவது ரம்ஜான் பண்டிகை என தம்முடைய வாழ்த்துச் செய்தியில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி சார்பில் ஸ்டாலின் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் உயரிய பண்புகளை வெளிப்படுத்துவது ரம்ஜான். கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிடப்படுகிறது.
தவ்ஹீத் ஜமாஅத்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: நாடெங்கும் ஈகைத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி ஈகைத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள் என்று பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம். மனிதர்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.
அமைதி, மனிதர்களுக்கு சேவை செய்தல், குழந்தைகளிடம் அன்பு செலுத்துதல், பெண்களின் உரிமைகளைப் பேணுதல், குடும்ப உறவுகளை அரவணைத்தல், பிற சமயத்தவர்களின் உணர்வுகளை மதித்தல், அவர்களோடு அன்புடனும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ளுதல் போன்ற நல்லுபதேசங்களை சொல்கிறது இஸ்லாம்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், இஸ்லாம் வலியுறுத்துகின்ற தன்மைகளை முஸ்லிம் சமுதாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், மதவெறி, வன்முறை, சமூகக் கொடுமைகள் போன்ற மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் நீங்கி, அமைதியும், அன்பும், சமூக நல்லிணக்கமும் தழைக்கவும், பிறருக்கு ஈந்து உதவும் பண்பு வளர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் மகிழ்ச்சி பொங்கும் இந்த ஈகைத் திருநாளில் உறுதி ஏற்போம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து:
ஈகைத் திருநாள் எனும் ரமலான் பெருநாளை கடைபிடிக்கும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் அன்பான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்களது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய மக்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பது பெருமகனார் நபிகள் நாயகத்தின் போதனை.
இந்த கோட்பாடுகளை ஜாதி மதங்களைக் கடந்து நாம் அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம். உலகெங்கும் ஜாதி, மதம், இனம், கலாசாரம் எனப் பலவற்றின் பெயரால் நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஓரணியில் திரளவும் பூமிப் பந்தெங்கும் மனித நேயம் மலரவும் இந்த ரமலான் திருநாளில் சூளுரை ஏற்போம்.
அண்ணல் நபிகள் நாயகத்தின் போதனை நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் அனைத்து சமூகங்களிடையேயான ஒற்றுமை நீடித்து நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம். இந்த நன்னாளில் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேல்முருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.