அங்கவை, சங்கவை கேலிக்கு பதிலடியா கபாலியின் கறுப்பு நிற புகழ்ச்சி? இயக்குநர் ரஞ்சித் பதில்
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான சிவாஜி திரைப்படத்தில் இடம் பெற்ற கருப்பு நிற அங்கவை, சங்கவை கேலிக்கு பதிலடியாகத்தான் கபாலியில் கறுப்பு நிறத்தை புகழ்ந்து தள்ளும் காட்சி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பட இயக்குநர் ரஞ்சித் பதிலளித்தார்.
நியூஸ்18 தமிழ்நாடு செய்தி சேனல் ஆசிரியர், குணசேகரனின், கபாலி பட சர்ச்சைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் ரஞ்சித்.
அப்போது கறுப்பு நிறம் குறித்து கபாலியில் இடம்பெற்ற புகழ்ச்சி குறித்து ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
கறுப்பு வண்ணம்
ரஜினி கதாப்பாத்திரத்தை பார்த்து, உங்களின் நிறத்தை பார்த்துமா காதலித்தார் என்று மாணவர்கள் கேட்பது போல கபாலியில் ஒரு காட்சி வரும். கறுப்பு வண்ணத்தின் ஈர்ப்பு பற்றி ரஜினி பதிலளிப்பார். பிறகு தனது மனைவி ராதிகா ஆப்தே தனது, நிறம் குறித்து பெருமையாக கூறியதை எடுத்து கூறுவார்.
உடலெங்கும் பூசனும்
அந்த பிளாஸ் பேக் காட்சியில், நாயகி ராதிகா ஆப்தே, ரஜினியின் நிறம் குறித்து வர்ணிக்கும்போது, "உனது கறுப்பு நிறத்தை எடுத்து என் உடலெங்கும் பூசிக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது" என்று, கண்கள் விரிய கூறுவார்.
சிவாஜியில் கேலி
இதுகுறித்து குணசேகரன் கேள்வி எழுப்புகையில், "சிவாஜி திரைப்படத்தில் அங்கவை, சங்கவை என கறுப்பு நிற பெண்களை காண்பித்து கேலி செய்ததாக சர்ச்சை எழுந்தது. அது ஒரு பக்கம் என்றால், கபாலியில் கறுப்பு வண்ணத்திற்கு புகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளதே" என்றார்.
கேலி தப்பு
பதிலளித்து ரஞ்சித் கூறியது: நமது தமிழ் சினிமாக்களில் நீண்ட காலமாக கறுப்பு வண்ணம் என்பது கேலிக்குறியதாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. இதுதான் தமிழர்களின், திராவிடர்களின் நிறம்.
நான் கறுப்பாக ஆசை
நான் கறுப்பாக இல்லாததை நினைத்து பலமுறை வருந்தியுள்ளேன். கறுப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இதைத்தான் படத்தில் காட்சியாக வைத்தேன் என்றார்.
சர்ச்சை
இயக்குநர் ஷங்கர் மேல்தட்டு மக்கள் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே, படம் எடுப்பவர் என்ற சர்ச்சை உண்டு. சிவாஜி படத்தில் இடம்பெற்ற அங்கவை, சங்கவை என்ற நகைச்சுவை காட்சி இந்த சர்ச்சைக்கு உரம் போட்டது. ஆனால், அதே திரைப்படத்தில் நாயகி ஷ்ரேயா, ரஜினியின் நிறத்தை கேலி செய்வதாக நினைத்துக்கொள்ளும் விவேக், கறுப்பின் பெருமை குறித்து பேசும் டயலாக்கும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.