ராசிபுரத்தில் நேபாள சிறுமி பலாத்காரம்- குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நேபாளத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது நீதிமன்றம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கருப்பணார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவி உள்ளார்.
இவரது வீட்டின் அருகே நேபாளத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த குடும்பத்தின் தலைவர் அங்கு இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது 15 வயது மகள் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி மாணவியின் தந்தை , உடல்நிலை பாதிக்கப்பட்ட பெரியப்பாவை பார்க்க ஆத்தூர் சென்று விட்டார். தாயார் ராசிபுரம் சென்று விட்டார். மாணவி அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு, எண்ணெய் வாங்கிவிட்டு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருந்த ரமேஷ், மாணவியை கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து உள்ளார். இதில் மயக்கம் அடைந்த மாணவியை அவர் பலாத்காரம் செய்து விட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராசிபுரம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர். பின்னர் அவர் மீது மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் வாதாடி னார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி மான்விழி குற்றம் சாட்டப்பட்ட ரமேஷூக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து ரமேஷ், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.