நெல்லையிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்... இருவர் கைது
நெல்லையிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை: தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை புளியரை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், சரக்குகள் ஏற்றி செல்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க புளியரை வாகன சோதனை சாவடியில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இரவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை இரண்டு மணி அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பத்மநாபபுரம் பகுதிக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
அதனை மடக்கி போலீஸார் சோதனையிட்டனர். லாரியில் மூட்டை மூட்டையாக 10 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் கிளினர் வெள்ளைபாண்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் நெல்லைக்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.