என்னுடைய சாவுக்கு மேலதிகாரிகளே காரணம்- “ஷாக்” கிளப்பும் ரேஷன் கடை ஊழியரின் கடைசிக் கடிதம்
சென்னை: தன்னுடைய சாவுக்க்கு அதிகாரிகள் தான் காரணம் என்று தற்கொலைக்கு முன்பு ரேஷன் கடை ஊழியர் எழுதிய கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, இளங்கோவன் வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டை போலீசார் தற்கொலை செய்து கொண்ட இளங்கோவன் சட்டையில் ஒரு கடிதம் இருப்பதை கண்டறிந்தனர். அதில், எண்ணூர் ஜே.ஜே.நகர் ரேஷன் கடைக்கு அதிகாரி பாபு உள்ளிட்ட பலர் வந்து கடுமையான நெருக்கடியைக் கொடுத்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல்நிலை வேறு சரியில்லை.
கடந்த 20ஆம் தேதி என் கடைக்கு வந்த துணை பதிவாளர், இணை பதிவாளர், அதிகாரி பாண்டியன், செல்லையா ஆகியோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். கடந்த 32 ஆண்டுகள் பணிக் காலத்தில் இதுபோன்று நடந்ததே இல்லை. என் மன உளைச்சலுக்கு அவர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.