நிலமோசடி புகார்.. போலீஸிடம் இன்று விசாரணைக்கு ஆஜராகும் ரவிபச்சமுத்துவும் கைது?
சென்னை: பண மோசடி குற்றச் சாட்டின் பேரில் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நிலையில், அவரது மகன் ரவி பச்சமுத்து நிலமோசடி புகாரில் இன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இதையடுத்து அவரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக கூறி 102 மாணவர்களிடம் ரூ.72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்து செய்தனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே எஸ்.ஆர்.எம். பேருந்து நிறுத்தம் உள்ளது. அதன் பின்புறம் இருந்த எட்டு கிரவுண்ட் நிலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி கூலிப்படை உதவியுடன் போலிப் பட்டா தயாரித்து ரவி பச்சமுத்து அபகரித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட டெய்சி, மாதவராவ், சீனிவாச ராவ், ராஜா, மகேஷ் ராஜா, கணேஷ் ராஜா ஆகியோர் ரவி பச்சமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுவரை 17 முறை புகார்கள் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரவி பச்சமுத்து மற்றும் அவர் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கோயம்பேடு காவல் ஆய்வாளர், ரவி பச்சமுத்துவின் பெயரை சேர்க்காமல், அலுவலக ஊழியர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோர், ரவி பச்சமுத்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ரவி பச்சமுத்து இன்று காலை 10 மணிக்கு கோயமபேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகிறார். இதுதொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார் கொடுத்த சம்மனை ரவி பச்சமுத்துவின் மனைவி பத்மபிரியா பெற்றுக்கொண்டார்.
முழுமையான விசாரணை நடக்கும் பட்சத்தில் ரவி பச்சமுத்துவும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.