சட்டசபை தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் தயாரா இருங்க- மா.செக்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
சட்டசபை தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் கொதிப்பில் உள்ளனர், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய ஸ்டாலின், முரசொலி நாளிதழ் பவள விழா, நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து பேசினார்.
கூட்டத்தில் பேசிய எ.வ.வேலு, க.பொன்முடி உள்ளிட்டோரும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசியதாக தெரிகிறது.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக வரும் 27ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தை பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாணவ, மாணவிகளையும், அவர்களது பெற்றோர்களையும் அதிக அளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். அதிமுக அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் கொதிப்பில் உள்ளனர். எனவே, எந்த நேரத்திலும் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரலாம். அதனை எதிர்கொள்ள மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பேசியதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முரசொலி பவள விழாவில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது முடிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.