ரெட்டை இலை எங்களுக்குதான்.. உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு ஏன் பயப்படணும்.. ஜெயக்குமார் பதிலடி
உள்ளாட்சி தேர்தலைக் கண்டு பயப்படவில்லை என்று ஓபிஎஸ் அணி மைத்ரேயனுக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை தைரியமாக சந்திக்க தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் அணியில் உள்ள எம்பி மைத்ரேயன், முதல்வர் பழனிச்சாமி அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாரா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.
இவருக்கு பதில் அளிக்கும் வகையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இரட்டை இலை எங்களுக்கே..
மேலும், தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாகத் தெரிவித்த ஜெயகுமார், 98 சதவீத நிர்வாகிகள் தங்களுடன் இருப்பதால் இரட்டை இலையை விரைவில் பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயம்
மாநில உரிமையை நிலைநாட்டுவதற்காகவும், தமிழகத்திற்கு தேவையான நிதி பெறுவதற்காகவுமே முதல்வர் பிரதமரை சந்தித்தார் என்று ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக, பிரதமரை சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசுடன் இணக்கம்
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்பட்டால்தான் வளர்ச்சியை பெற முடியும். மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறு இல்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நிபந்தனை இல்லாமல் வந்தால்…
முன்னால் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் அணி, நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசுவோம். இல்லை என்றால் இணைப்பில் சிக்கல் நீடிக்கவே செய்யும் என்றும் அமைச்சர் கூறினார்.