இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதிதான் பட்டேல்கள் போராட்டம்: திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: பொருளாதாரத்தில் மட்டுமின்றி சமூகத் தகுதியில் மிக உயர்ந்த நிலையில் உள்ள படேல் வகுப்பினர், தங்களின் கோரிக்கையில் ஞாயமில்லை என்பதை உணர்ந்திருந்தாலும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது இடஒதுக்கீட்டுக் கொள்கையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் அறிக்கை
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: குஜராத்தில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படேல் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று கோரி லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர். அப்போராட்டம் வன்முறையாக மாறி, துப்பாக்கிச் சூடு நடந்து, சுமார் 10 பேர் பலியாகியுள்ளனர்.
யூ டர்ன் அடித்த பட்டேல்கள்
1981, 1985 ஆகிய ஆண்டுகளில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீட்டு முறையே கூடாது என சமூகநீதிக் கொள்கைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெடித்த வன்முறைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அன்று இடஒதுக்கீடே கூடாது என வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டுமென்று வன்முறை வெறியாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு என்ன பின்னணி என்பதுதான் கேள்விக்குரியதாக உள்ளது.
தீய நோக்கம்
படேல் சமூகத்தினர் பெரும்பான்மையாக விவசாயம், பால் வியாபாரம், வைர வியாபாரம் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற தொழில்களை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்கள் இந்திய அளவில் பொருளாதாரத்தில் மிகவும் வலிமைமிக்க முற்பட்ட வகுப்பினர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனாலும் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்க வேண்டுமென அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவது சமூகநீதிக்கெதிரான அவர்களின் தீய உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
பிறருக்கு கிடைக்கிறது என்ற ஆதங்கம்
தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் தங்களைவிடத் தகுதியில் குறைந்திருந்தும் இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி வேலைவாய்ப்பில் பயன்பெறுகின்றனர் என்றும், படேல் வகுப்பினர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் ஒப்பீடு செய்வது சமூகநீதிக் கோட்பாட்டிற்கான அடிப்படையையே புரிந்துகொள்ளவில்லை என்பதும், புரிந்துகொண்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
இட ஒதுக்கீட்டை ஒழிக்க
‘எங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குங்கள்; இல்லையேல் இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கைவிடுங்கள்' என்று தங்களின் உண்மை நோக்கத்தைத் தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றனர். பொருளாதாரத்தில் மட்டுமின்றி சமூகத் தகுதியில் மிக உயர்ந்த நிலையில் உள்ள படேல் வகுப்பினர், தங்களின் கோரிக்கையில் ஞாயமில்லை என்பதை உணர்ந்திருந்தாலும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது இடஒதுக்கீட்டுக் கொள்கையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
அமித்ஷாவுக்கும் இதே விருப்பம்
இடஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் இன்று மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இத்தகைய போராட்டங்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவதையும் காண முடிகிறது. பாரதிய சனதா கட்சியின் தலைவர் அமீத்ஷா தமிழகத்திற்கு வந்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் எனப் பேச வைக்கிறார்.
வேடிக்கை
அவர் சொந்த மாநிலமான குஜராத்தில் வைர வியாபாரிகளான தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும், இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையே வேண்டாம் என படேல் சமூகத்தினர் பேசுவதை வேடிக்கைப் பார்க்கிறார். மொத்தத்தில், இடஒதுக்கீட்டு முறையே கூடாது என்னும் கருத்தை வலுப்பெறச் செய்வதே அமீத்ஷா போன்றவர்களின் நோக்கம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
போராட வாருங்கள்
இத்தகைய ஒரு சூழலில் இடஒதுக்கீட்டு முறையைப் பாதுகாப்பதற்கு சமூகநீதிச் சிந்தனையாளர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரச்சனையாக மட்டும் கருதாமல், சமூகநீதிக் கோட்பாட்டையே அழித்தொழிக்கத் துடிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்துவதும், அவர்களுக்கெதிரான அறப்போராட்டத்தில் ஈடுபடுவதும், அதற்கென அகில இந்திய அளவில் அணிதிரள வேண்டியதும் இன்றைய வரலாற்றுத் தேவை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.