கச்சத் தீவு மீட்பு மட்டுமே மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு - ஓ பன்னீர் செல்வம்
சென்னை: கச்சத் தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறுவோம்.. கச்சத் தீவு மீட்பு மட்டுமே மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு, என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:
தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க தொடர் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதும், அவர்களின் படகுகள் இலங்கை அரசால், விடுவிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திலும், அதன் பிறகு பல்வேறு நாள்களில் அனுப்பிய கடிதங்களிலும் தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி வற்புறுத்தினார்.
கடந்த 4-ஆம் தேதி, இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரியிடம், தூதரக ரீதியில் படகுகள் விடுவிக்கப்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, இலங்கை அதிகாரிகளை வற்புறுத்தும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு ஏதுவாக, இலங்கை நீதிமன்றத்தில் வாதாட உரிய வழக்குரைஞர்களை நியமிக்கவும், அதற்கான செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், இந்திய தூதரகத்தால் வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டனர். இதனிடையே, படகுகளை கடந்த 12-ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளை பொறுப்பேற்றுக் கொள்ள மீன்வளத் துறை அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடிப் படகுகளை தமிழகம் கொண்டு வருவதற்கான எரிபொருள், உணவு, பழுது நீக்கச் செலவு ஆகிய அனைத்துச் செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும்.
பாக். நீரிணையிலும், மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பிரச்னை, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படலாம் என்பதால், இரு நாட்டு மீனவர்களிடையே வருகிற மார்ச் 5-ஆம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கச்சத் தீவு மீட்பு மட்டுமே நிரந்தரத் தீர்வு
மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமைவது கச்சத் தீவு மீட்பு மட்டுமே என்பதால், மத்திய அரசிடம் இதை தொடர்ந்து வற்புறுத்துவோம். கச்சத் தீவை மீட்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில், சாதகமான தீர்ப்பை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.