ஜனவரி 7ம் தேதி முதல் 48 நாட்களுக்கு யானைகளுக்கு நலவாழ்வு முகாம்: தமிழக அரசு
சென்னை: தமிழக கோவில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான 43 யானைகளுக்கு வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு நலவாழ்வு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
இந்த ஆண்டு (2015-2016) திருக்கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான 41 யானைகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 2 யானைகள் ஆக மொத்தம் 43 யானைகளுக்கு 2016-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7ஆம் நாள் முதல் 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, வன பத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் "யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்" நடத்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
முகாமில் கலந்து கொள்ள உள்ள யானைகளுக்கான மொத்த செலவுத் தொகை ரூ. 1,04,72,000-த்தை அரசு ஏற்பதற்கும் ஆணையிட்டுள்ளார்.
முகாமிற்கு வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தி முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டியதில்லை எனவும் நோயுற்று இருக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளதோடு, தற்போது இருக்கும் இடத்திலேயே இந்த யானைகளுக்கும் முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி ஆகியன வழங்கப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு தேவையான ஆயத்தப் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு, தகுதியுள்ள யானைகளை தேர்வு செய்து 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு 48 நாட்கள் "யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்" நடைபெறும்.
முகாமிற்கு வர மறுக்கும் யானைகள் நோயுற்று இருக்கும் யானைகள் ஆகியவற்றிற்கு தற்போது அவைகள் இருக்கும் இருப்பிடத்திலேயே முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி ஆகியன வழங்கப்படும்.
மேலும், மேற்கண்ட யானைகளை நல்ல முறையில் பராமரித்திட ஏதுவாக யானைகள் பராமரிப்பு குறித்து நன்கு அறிந்த வல்லுநர்களைக் கொண்டு யானைப்பாகர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.