முன்னாள் டிஜிபியின் உறவினரை 3 துண்டுகளாக வெட்டி ஆற்றில் தூக்கிப் போட்ட கொலையாளிகள்!
சேலம்: முன்னாள் போலீஸ் டிஜிபி ராமானுஜத்தின் உறவினர் ஒருவரை நிலத் தகராறில் சிலர் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். அவரது உடலை 3 துண்டுகளாக வெட்டி காவிரி ஆற்றில் போட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்ப[டுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வடுகபட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் துரைசாமி. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற, துரைசாமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி கனகவள்ளி, சங்ககிரி போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியின் பின்புறம் காவேரி ஆற்றங்கரை ஓரம் கழுத்தறுக்கப்பட்டு 3 துண்டுகளாக ஒரு உடல் கிடந்தது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து சென்று உடல் பாகங்களை மீட்டு விசாரணையைத் தொடங்கினர். அப்போதுதான் அது சங்ககிரியில் காணாமல் போன துரைசாமி என்பது தெரிய வந்தது.
துரைசாமி, முன்னாள் டிஜிபியும், தற்போது தமிழக அரசின் ஆலோசகராக உள்ளவருமான ராமானுஜத்தின் உறவினர் ஆவார். இதனால் பரபரப்பு கூடியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், ஐவேலி ஊராட்சி மன்ற தலைவரும், ஜெயலலிதா ஒன்றிய செயலாளருமான ராம்சந்தர் என்பவரது டிரைவர் சண்முகம், குமாரபாளையத்தை சேர்ந்த மஞ்சுநாதன், சுப்பிரமணி, மணி என்கிற கருவாமணி ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.
நிலத்தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.