செல்போன் திருடியதற்காக மனநலம் பாதித்த இளைஞரின் கையை எரித்த உறவினர்கள்!
சென்னை: தர்மபுரியில் செல்போன் திருடியதற்காக மனநலம் பாதித்த இளைஞரின் வலது கையை உறவினர்கள் எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப் பட்ட அந்த இளைஞர் தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேதவள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (63). இவரது மகனான பவுன்ராஜூக்கு லேசாக மனநிலை பாதிப்பு உள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்த செல்போனில் பாட்டு கேட்டுள்ளார் பவுன்ராஜ். பின்னர் பாட்டுக் கேட்டபடி அவர் அந்த செல்போனை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பவுன்ராஜை அருகிலுள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்று கைகளைக் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர், பவுன்ராஜின் வலது கையில் துணியைச் சுற்றி, அதில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துள்ளனர்.
இதில் கையில் பலத்த காயமடைந்த பவுன்ராஜை பாலக்கோடு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு பவுன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கை ஆட்காட்டி விரல் முழுமையாக எரிந்து விட்டதாகவும், மணிக்கட்டுக்கு கீழ் ரத்த ஓட்டம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீக்காயத்துறை தலைவர் டாக்டர் நிர்மலா பொன்னம்பலம் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் இளைஞரின் உள்ளங்கை காப்பாற்றப்பட்டுள்ளது. கை விரல்களையும் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் ஒருவரை தேடி வருகிறார்கள்.