பாடலாசிரியர் அண்ணாமலை கொல்லப்பட்டாரா?.. உறவினர்கள் பரபரப்பு சந்தேகம்!
சென்னை: பாடலாசிரியர் அண்ணாமலையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டைக்காரன், வேலாயுதம் உட்பட 50 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் அண்ணாமலை.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த கீழப்பட்டுவைச் சேர்ந்த இவர், மகளின் படிப்பிற்காக சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார்.
நேற்று முன் தினம் மாலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அண்ணாமலையை அவரது மனைவி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அண்ணாமலை இறந்து பல மணிநேரம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
மாரடைப்பால் அண்ணாமலை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அண்ணாமலையில் தலையில் காயம் இருப்பதாகவும், எனவே அவரது மரணம் இயற்கையானது இல்லை என்றும் அவரது உறவினர்கள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
நேற்று முன் தினம் காலை 8.40 மணியளவில் தன் நண்பர் ஒருவரிடம் கடைசியாகப் பேசியுள்ளார் அண்ணாமலை. ஆனால் அதன் பிறகு அவர் யாருடைய போனையும் எடுக்கவில்லை. எனவே, அப்போதே அவர் சுயநினைவை இழந்திருக்க வேண்டும் அல்லது உயிரிழந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே, குடும்பத்தில் அண்ணாமலைக்கு சில பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. எனவே, அவர் கொலைகூட செய்யப்பட்டிருக்கலாம் என்பதே அவரது உறவினர்களின் சந்தேகம்.
இதனால், அந்தக் கோணத்திலும் போலீசார் விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.