கரூர் மாணவி சோனாலி அடித்துக்கொலை: 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்ற உறவினர்கள்
மதுரை: பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு கரூரில் ஒருதலைக்காதல் சம்பவத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட மாணவி சோனாலியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
மதுரை மாவட்டம் மானகிரியை சேர்ந்தவர் செல்வம். இறந்து விட்டார். தாய் தனலட்சுமி. இவர்களது மகள் சோனாலி,21. கரூர் பொறியியல் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி மூன்றாமாண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வந்தார். இதே வகுப்பில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த வெங்களூரைச் சேர்ந்தவர் உதயகுமாரும்,23 படித்து வந்தார்.
ஒரே வகுப்பு என்பதால், சோனாலியை காதலிப்பதாக நண்பர்களிடம் கூறினார் உதயகுமார். ஆனால் அவர் காதலை ஏற்கவில்லை. இருந்தாலும், தன்னை காதலிக்குமாறு சோனாலியை தொந்தரவு செய்துவந்தார். உதயகுமாரின் நடத்தை குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றதன் அடிப்படையில் 2015 நவம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால், ஒரு ஆண்டாக சொந்த ஊரில் இருந்தார்.
செவ்வாய்கிழமையன்று திடீரென கல்லூரிக்கு வந்த உதயகுமார், நுழைவு வாயிலில் உள்ள வாட்ச்மேனிடம்,கல்லூரியில் மீண்டும் சேர வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதை நம்பி, கல்லூரிக்குள் செல்ல வாட்ச்மேனும் அனுமதித்துள்ளார். கல்லூரிக்குள் சென்ற உதயகுமார், அங்கிருந்த பழைய நண்பர் பவித்ரனை சந்தித்தார். அவரிடம், மாணவி சோனாலி பற்றியும், அவர் படிக்கும் வகுப்பறை குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டார்.
முதல் மாடியில் உள்ள வகுப்பறைக்குள் புகுந்தார். அங்கு பேராசிரியர் சதீஷ்குமார் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். சோனாலியுடன் பிற மாணவ, மாணவிகளும் அமர்ந்திருந்தனர். உள்ளே சென்ற உதயகுமாரை கண்டு சோனாலி அதிர்ச்சியடைந்தார். உதயகுமார் திரும்பவும் காதலை சோனாலியிடம் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வகுப்பறையில் கிடந்த கட்டையை எடுத்து, மாணவி சோனாலியின் தலையில் ஆவேசமாக உதயகுமார் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சோனாலி வலி தாங்க முடியாமல் கதறி அழுதார். அங்கிருந்த பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் மாணவர்களும் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களையும் உதயகுமார் தாக்கினார். சத்தம் கேட்டு பக்கத்து வகுப்பறையில் இருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் ஓடிவந்தனர். அதற்குள், உதயகுமார் தப்பி ஓடிவிட்டார்.
உயிரிழந்த சோனாலி
ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனாலியை கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பேராசிரியர்கள் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனாலி நேற்று மாலை இறந்தார்.
கொலையாளி கைது
தகவல் அறிந்து கல்லூரிக்கு சென்ற டவுன் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த மாணவ, மாணவிகளிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தினர். பின்னர் கல்லூரி அருகே உள்ள மண்மங்கலத்தில் பதுங்கி இருந்த உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன்பின்னர் உதயகுமாரை டவுன் போலீசார் நேற்றிரவு 9 மணியளவில் திருச்சி சிறையில் அடைத்தனர்.
4 பிரிவுகளில் வழக்கு
உதயகுமார் மீது தகாத வார்த்தையால் திட்டியது(294பி), தடுக்க வந்தவர்களை தாக்கியது(324), கொலை மிரட்டல் விடுத்தது(506/2) மற்றும் கொலை செய்தது(302) போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். மாணவி கொலை காரணமாக தனியார் பொறியியல் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை விடுப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உதயகுமார், சோனாலியை பார்ப்பதற்கு முன்பு, எந்தெந்த நண்பர்களை சந்தித்து பேசினார், என்னென்ன பேசினார் என்பது குறித்தும் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை
சோனாலியின் உறவினர்கள் நேற்று மாலை மதுரை தனியார் மருத்துவமனை முன்பு குவிந்தனர். சரியான தகவல் தராத கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனக்கூறி மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு
சோனாலியின் தாயார் தனலட்சுமி சென்னையில் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் இரவு முழுவதும் சோனாலியின் உடல் தனியார் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் சோனாலியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு காத்திருந்தனர். நேற்று அவரது தாயார் வந்த பின்னர், சோனாலியின் உடல், தனியார் மருத்துவமனையில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒருதலைக் காதலால் இந்தக் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தாலும், கல்லூரி தரப்பில் இதுவரை எந்தத் தகவலும் தெளிவாக தெரிவிக்கவில்லை என, உறவினர்கள் குற்றம்சாட்டினர். நடந்த சம்பவம் குறித்து தெளிவுப்படுத்தினால் மட்டுமே உடலை வாங்கப்போவதாகவும் தெரிவித்தனர். கொலை நடந்து 24 மணிநேரத்திற்கு மேலாகியும் இதுவரைக்கும் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து ஒருவர் கூட வந்து விசாரணை நடத்தவில்லை என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
மாணவி சோனாலியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் கோட்டாட்சியர் செந்தில்குமாரி தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து சோனாலியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இதனால் பல மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.