கிழிந்த ரேசன் கார்டில் மீண்டும் உள்தாள்: டிச.15 முதல் ஒட்டும் பணி தொடக்கம்
சென்னை: ரேஷன் கார்டில் 2015ஆம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்குகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி வருவதால், அவை கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளது.
பயோமெட்ரிக் கார்டுகள்
மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 24ம் தேதி உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசும்போது, "தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி 5 கோடியே 87 ஆயிரத்து 395 நபர்களுக்கு உடற்கூறு பதிவுகள் (பயோ மெட்ரிக்) கணினியில் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 4 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 490 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டையில் இணைத்து, குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலத்தை 01.01.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளுக்கு டிசம்பர் மாதம் அத்தியாவசிய பொருட்கள் பெற வரும்போது அவர்களுடைய குடும்ப அட்டையில் 2015ம் ஆண்டிற்கான உள்தாளை இணைத்து வழங்கப்படும்" என்றார்.
அமைச்சர் காமராஜ் அறிவித்தபடி, கடந்த 1ஆம் தேதி ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் உள்தாள் ஒட்டாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், நாளை மறுதினம் (15ஆம் தேதி) முதல் உள்தாள் ஒட்டும் பணி தொடங்குகிறது.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பழைய ரேஷன் கார்டுகளில் 2015ம் ஆண்டிற்கான உள்தாள் அச்சிடப்பட்டு, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனால், வருகிற 15ம் தேதி, அதாவது திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கும் பொதுமக்கள் நேரில் சென்று, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டிக் கொள்ளலாம்.
இந்த மாத இறுதி வரை உள்தாள் ஒட்டப்படும். தேவைப்பட்டால் ஜனவரி மாதமும் இந்த பணி நடைபெறும். அதனால் பொதுமக்கள், ஒரே நாளில் உள்தாள் ஒட்ட வேண்டும் என்ற அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ரேஷன் கடையில் சுமார் 2 ஆயிரம் கார்டுகள் வரை இருக்கும்.
ஒரு ரேஷன் கடையில் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 கார்டுகளில் உள்தாள் ஒட்ட முடியும். எந்த பொருளும் வேண்டாம் என்ற (என்-கார்டு) குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்" என்றார்.
15, 16ல் ரேஷன் பொருட்கள்
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 15ம் தேதி முதல் உள்தாள் ஒட்டும் பணி தொடங்குகிறது. உள்தாள் ஒட்ட முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அதிக கூட்டம் இருக்கும். அதனால், முதல் ஒரு சில நாட்கள் காலை முதல் மாலை வரை ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி மட்டுமே நடைபெறும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
17ஆம் தேதிக்கு பிறகு, காலையில் ரேஷன் பொருட்களும், மாலையில் உள்தாள் ஒட்டும் பணியிலும் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். மேலும், பொதுமக்களுக்கு ரேஷனில் தினசரி கண்டிப்பாக பொருள் வழங்க வேண்டும் என்பதால், ஒரு சிலருக்கு மட்டும் பொருட்கள் வழங்க ரேஷன் கடை ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.