'விகடன்' பாலசுப்பிரமணியன், 'இந்து' எம்.சி. சம்பத் மறைவுக்கு ரிப்போர்ட்டர்ஸ் கில்டு இரங்கல்
சென்னை: விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், 'இந்து' நாளேட்டின் ஓய்வு பெற்ற சீனியர் அசோசியேட் எடிட்டர் எம்.சி. சம்பத் ஆகியோர் மறைவுக்கு ரிப்போர்ட்டர்ஸ் கில்டு இரங்கல் தெரிவித்துள்ளது.
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு தலைவர் ரங்கராஜ், செயலாளர் டி. சேகர் ஆகியோர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:
விகடன் குழுமத்தின் நவீனத்தைப் புகுத்திய எஸ். பாலசுப்பிரமணியன், தமிழக பத்திரிகையாளர்களின் முன்னோடியாக திகழ்ந்தவர். தமிழக அரசால் அவர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஆதரவாக ரிப்போர்ட்டர்ஸ் கில்டு முன்னணியில் நின்று போராட்டங்களை நடத்தியது.
இதற்காக ரிப்போர்ட்டர்ஸ் கில்டு நிர்வாகிகளை தமது படப்பை பண்ணை இல்லத்துக்கு அழைத்து தாமே சமைத்து விருந்து படைத்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல் 50 ஆண்டுகாலம் இந்து பத்திரிகையில் சீனியர் அசோசியேட் எடிட்டராக பணியாற்றிய எம்.சி. சம்பத் 2012ஆம் ஆண்டு ஓய்வு பெறார். இந்து நாளேட்டில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்.
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்து செயலாற்றியவர். அவர் கடந்த 20-ந் தேதி மாரடைப்பால் 78 வயதில் காலமானார். அவரது மறைவுக்கும் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.