மருத்துவர்கள் தாக்குதலைக் கண்டித்து ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே செய்தியாளர்கள் போராட்டம்!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவரை மருத்துவர்கள் தாக்கியதைக் கண்டித்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர் ஒருவரை மருத்துவர் தாக்கியதைக் கண்டித்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பியோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதனிடையே, இந்தப் போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை மருத்துவர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. நிருபரை தாக்கிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செய்தியாளர்கள் மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பயிற்சி மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் செய்தியாளர்களின் போராட்டத்தால் 2 மணிநேரமாக போர்க்களமானது ராஜீவ் காந்தி மருத்துவமனை.