போயஸ் கார்டனில் பத்திரிகையாளர் மண்டை உடைப்பு.. வைகோ கண்டனம்
சென்னை: போயஸ் இல்லத்திற்குள் வைத்து பத்திரிகையாளர் ஒருவர் மோசமாக தாக்கப்பட்டார்.
போயஸ் இல்லத்திற்குள் தீபா இன்று திடீரென சென்ற தகவல் அறிந்து ஆங்கில செய்தி சேனலான ரிபப்ளிக் டிவி சேனல் நிருபர் மற்றும் கேமரா மேன் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்களுக்கு என்னவானது என்ற தகவல் வெளியாகவில்லை.
சபாரி போட்ட சசிகலாவின் தனியார் பாதுகாவலர்கள் கேமரா மேனையும், நிருபரையும் தடியால் அடித்ததாக தீபா தெரிவித்தார். நிருபர், கேமரா மேன் தலையிலும் அடி விழுந்துள்ளது. கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளன.
இதை பார்த்துதான் தீபா அலர்ட் ஆகி தனது கணவர் மாதவனுக்கு போன் செய்துள்ளார். இதுகுறித்து தீபா தெரிவிக்கையில், தீபக் அழைத்ததால் போயஸ் இல்லம் சென்றேன். உள்ளே திடீரென குண்டர்கள் நிருபர்கள், காமிரா மேன்களை தாக்கியதால் பயந்து போய் எனது கணவருக்கு போன் செய்தேன் என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான நிருபர் மற்றும் காமிரா மேன் தலையில் பெரும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.