ஆஸ்திரேலிய அபார்ஜினல்களும் தமிழர்களும் ஒன்றுதான்.. வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர் கர்ணன் உறுதி
ஆஸ்திரேலியாவில் வாழும் அபார்ஜினல்கள் என்று அழைக்கப்படும் அந்நாட்டு பழங்குடியினர் தமிழர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஆஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர் கர்ணன் கூறியுள்ளார்.
மதுரை: ஆஸ்திரேலிய பழங்குடிகளான அபார்ஜினல்களும் தமிழர்களும் ஒன்று என்று மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் எழுத்தாளர் கர்ணன் கூறியுள்ளார்
மதுரை உலக தமிழ் சங்கம் சார்பில் ஆஸ்திரேலிய பழங்குடியினர் வாழ்வியலும் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.
உலக தமிழ் சங்க இயக்குனர் சேகர் தலைமை வகித்தார். பேராசியர் மோகன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர் கர்ணன் பேசியதாவது:
அபாரிஜனல்கள்-திராவிடர் ஒற்றுமை
ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வ குடி மக்களான அபாரிஜனல்களும், திராவிடர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அவர்களின் வாழ்வியல் முறைகள், போர்க் கருவிகள், அவர்கள் பேசும் மொழியில் உள்ள ஒற்றுமைகள் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வாழ்வியல்
ஆஸ்திரேலிய பழங்குடியினர், திருநீறு, குங்கும் பூசுகின்றனர். இந்த மக்கள் ஆஸ்திரேலியாவின் தெற்கு மற்றும் வடக்கு மாநிலத்தில் அதிகமாக வாழ்கின்றனர். பெரும்பாலும் மலையடிவாரத்தில் குடியிருப்புகளை அமைத்து வசிக்கின்றனர்.
நகர்ப்புற வாழ்வில் நாட்டம் இல்லை
அதே போன்று ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வதற்கு விரும்பம் கொள்வதில்லை. அவர்கள் நகர் புறங்களில் தங்களது இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு உண்டு.
லெமூரிய கண்டத்துடன் ஆஸ்திரேலியா
லெமூரிய கண்டத்தில் ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருக்க வாய்புள்ளது. இயற்கை சீற்றம் போன்ற புவி மாற்றத்தால் அவை பிரிந்திருக்கக் கூடும். இதனடிப்படையில் ஆஸ்திரேலிய பழங்குடியினர் தமிழர்களாக இருக்க வாய்ப்பு அதிகம்.
தமிழரின் தொன்மை
இவற்றை பல்வேறு ஆய்வுகள் மூலம் நிறுவ முடியும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை தொன்மை உலகமறியச் செய்ய முடியும்.
வாழும் தமிழ்
ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழியில் கல்வி கற்கலாம் என்றிருப்பதால் பள்ளிகளில் குழந்தைகள் தமிழ் கற்க முடியும். வீட்டிலும் அதே போல் தமிழ் பேசப்பட்டால் தமிழ் வாழும் என்று கர்ணன் கூறினார்.