சரியாக பரீட்சை எழுதவில்லை... ரயில் முன் பாய்ந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!
சேலம்: சேலம் அருகே இயற்பியல் தேர்வு சரியாக எழுதாததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடங்கள், தேர்வுகள் அனைத்தும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையை வளர்க்க உதவ வேண்டும். ஆனால், அதுவே எதிர்காலம் எனக் கருதி சரியாக படிக்கவில்லை, தேர்வு எழுதவில்லை என தற்கொலை உள்ளிட்ட தவறான முடிவுகளை எடுத்து விடுவது வருத்தம் அளிக்கின்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வசந்தி (18 ) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி.
கடந்த வெள்ளியன்று இயற்பியல் தேர்வு எழுதினார் வசந்தி. சரியாக பாடங்களைப் படிக்காததால், தேர்வை ஒழுங்காக எழுதவில்லை என வருத்தத்தில் இருந்துள்ளார் அவர். இதனால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை முதலே வசந்தியை வீட்டில் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் வசந்தியை அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.
அப்போது கவுண்டன்காடு என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் வசந்தி சடலமாகக் கிடந்த தகவல் கிடைத்தது. அவர் அணிந்திருந்த உடையை வைத்து, பெற்றோர்கள் மாணவியை அடையாளம் காட்டினர்.
இதுகுறித்து, ஓமலூர் இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.