கைது செய்யப்பட்ட கர்ணன் நாளை கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று விசாரணை.. மேற்கு வங்க ஏடிஜிபி
கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் நாளை சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
கோவை: உச்சநீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் இன்று கோவையில் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கர்ணன் தலைமறைவாகிவிட்டார்.
இதனிடையே, கர்ணன் நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், கோவையில் இருந்த கர்ணனை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கொல்கத்தா ஏடிஜிபி ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம், "இன்று இரவு 11 மணி அளவில் சென்னைக்கு கர்ணன் அழைத்துச் செல்லப்படுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு தொடர்ந்து விசாரணை நடக்கும்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே தான் போலீசாருடன் செல்ல மாட்டேன் என கர்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.