ஜல்லிக்கட்டு.. சென்னை கலவரம்.. விசாரணையை தொடங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற வன்முறை குறித்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் சென்னை மெரினாவில் இன்று தொடங்கினார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழு இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 23ம் தேதி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கலைக்க போலீசார், மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் போலீசாரின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.
ஆணையம் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி
அதன்படி, விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணை ஆணையம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.
போலீசாரிடம் விசாரணை
மெரினாவில் தொடங்கியுள்ள இந்த விசாரணையில் முதல் கட்டமாக போலீசாரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. போராட்டத்தின் போது சம்பவ இடத்தில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளான பாலகிருஷ்ணன், அன்பு, சுதாகர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் நடுக்குப்பம், மாட்டங்குப்பம், அம்பேத்கர் பாலம் பகுதிகளில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணை மேற்கொள்கிறார். இந்தப் பகுதிகளில்தான் போலீசாரே ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், மீன் சந்தை, குடிசைகளுக்கு தீவைத்த பகுதிகளாகும்.
இறுதி அறிக்கை
இந்த விசாரணையின் போது, எவ்வளவு பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர், எவ்வளவு பேர் அடி உதை வாங்கி பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேரின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்பது குறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டு அதன் அறிக்கையை 3 மாத காலத்திற்குள் தமிழக அரசுக்கு விசாரணைக் குழு சமர்ப்பிக்கும்.