போலி வாரண்ட் ஸ்லிப்பை காண்பித்து பஸ்களில் நூதன மோசடி.. மாஜி இன்ஸ்பெக்டர், 2 கன்டக்டர்கள் கைது
கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் போலியான வாரண்ட் சிலிப் தயாரித்து சப்ளை செய்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு அரசு நடத்துனர்களை போலீசார் கைது செய்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமற்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இவர்களுடன் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் போலியான வாரண்டு சிலிப்பை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் , போக்குவரத்து துறையும் பல்வேறுகட்ட விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ் . இவர் நாகர்கோவிலிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்ததும் பணம் செலுத்தும் போது போலியான போலீஸ் வாரண்டுகளை சமர்பித்து பணமோசடி செய்து வந்துள்ளார்.
வாரண்டுகளை நிரப்பும் போது கையும் , களவுமாக பிடிபட்டுள்ளார். அவரை விசாரித்த போது போலீஸ் ஒருவர் தனக்கு வாரண்டுகளை தந்ததாக கூறியிள்ளார். போலீசாரின் விசாரணையில் சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அய்யாசாமி என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில் குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் சண்முகம் என்பவருக்கும் தொடர்பு இருந்ததை உறுதி செய்த போலீசார் கைது செய்து மூவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் இவர்களுக்கு வாரண்டு சிலிப்புகள் எங்கிருந்து கிடைத்தது, யாரிடமிருந்து பெற்றனர், தற்போது பணியாற்றும் காவலர்களிடமிருந்து கிடைக்கபெற்றதா எனவும், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நேசமணிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,இந்த மோசடி சம்பவம் காவல் வட்டாரத் தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.