அப்பல்லோவில் இருந்து ஆளுநர் மாளிகை சென்று ஆலோசனை நடத்திய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ்
சென்னை: அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22 ம் தேதி இரவு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தினமும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த அறிக்கைகளின்படி, அவர் உடல் நலம் நல்ல நிலையில் இருப்பதாகவும் அதேசமயம் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியிட வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக அவர், அப்போலோ மருத்துவமனை சென்றார். அங்கு முதல்வருக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்து கிண்டி ராஜ்பவன் மாளிகைக்கு சென்றார். அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழக நிலவரங்களைக் கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார் எனவும் கூறப்படுகிறது.