மீண்டும் அதிகாரிகள் மாற்றம்… பணிகள் பாதிக்கும் அபாயம்
தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வருவாய் அதிகாரிகள் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வருவாய் துறையில் ஆர்டிஓவாக ஓராண்டு பணி புரிந்தவர்கள் துணை கலெக்டர் அந்தஸ்தில் வேறு பணியிடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால் ஆர்டிஓ பலர் இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஓரே இடத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
இதனால் அரசு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ளவர்களுக்கு ஆர்டிஓ பணி வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும், பதவி உயர்வு மூலம் துணை கலெக்டரான பலருக்கும் ஆர்டிஓ பதவி கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்டிஓக்கள், துணை கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் பயிற்சி துணை கலெக்டராக இருந்த மைதிலி தற்போது நெல்லை ஆர்டிஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் முன்னாள் கலால் உதவி ஆணையர் அசோகன் தற்போது மதுரை ஆர்டிஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முன்னாள் மண்டல மேலாளர் ரெகொபெயாம், மதுரை, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம், முன்னாள் ஆர்டிஓ விஜய்பாபு, சேலம் பொது, கலெக்டரின் நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர், முன்னாள் ஆர்டிஓ பேபி, ராமநாதபுரம் ஆர்டிஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கலெக்டர் ஜான்சன், திண்டுக்கல், மாவட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை ஆர்ஓவாக இருந்த செந்தில்குமார், மதுரை, பொது, கலெக்டரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று நெல்லை ஆர்டிஓவாக இருந்த பெர்மி வித்யாவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.