இழுத்து மூடப்படும் எஸ்.சி.வி.. கேபிள் டிவி ஒளிபரப்பில் உடனடி பாதிப்பா?
சென்னை: தமிழக கேபிள் ஒளிபரப்பில் செல்வாக்கு செலுத்தி வந்த சன் டிவி குழுமத்தின் எஸ்.சி.வி.க்கான உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் கேபிள் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் சன் டிவி குழும தொலைக்காட்சிகளை தெரிய வைப்பதற்கான அரசியல், ஆட்சி பலத்துடன் உருவாக்கப்பட்டதுதான் எஸ்.சி.வி. இது கல் கேபிள்ஸ் என்ற கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனத்தின் கீழ்தான் வருகிறது.
இந்த கல் கேபிள்ஸுக்கான உரிமத்தைத்தான் தற்போது மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கல் கேபிள்ஸ் உடனே வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆனால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமோ, உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு கிளியரன்ஸ் கொடுக்காத காரணத்தால்தான் கல் கேபிள்ஸ் உட்பட 17 நிறுவன உரிமங்களை ரத்து செய்தோம் என கூறுகிறது
இதன் மூலம் கேபிள் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்படுமா?
- எஸ்.சி.வி.க்கான உரிமம் ரத்தானதன் மூலம் உடனடியாக ஒளிபரப்பில் எந்த ஒரு பாதிப்பும் வராது
- உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு, எஸ்.சி.வி. தனது ஒளிபரப்பில் '15 நாட்களுக்குப் பின் எங்கள் சேவை நிறுத்தப்படும்' என்று ஸ்குரோலிங்விட உத்தரவிட்டுள்ளது
- இதனால் அந்த பகுதியில் ஒளிபரப்பு உரிமம் பெற்ற நிறுவனங்கள் உடனடியாக எஸ்.சி.வி. சந்தாரர்களை கைப்பற்ற முடியும்.
- அதே நேரத்தில் நீதிமன்றத்தில் கல் கேபிள்ஸ் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இடைக்கால தடை வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.
- அப்படி கல் கேபிள்ஸுக்கு சாதகமாக இடைக்கால தடை விதிக்கப்பட்டால் வழக்கு முடியும் வரை எஸ்.சி.வி.தான் கோலோச்சிக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது,
- இதனாலும் கேபிள் ஒளிபரப்பில் உடனடி பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.