ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணிகளில் சசிகலா அணி தொய்வு... ஏன் தெரியுமா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணிகளில் சசிகலா அணியினர் தற்போது ஆர்வம் காட்டாதது ஏன் என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.
சென்னை: ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் பணிகளில் சசிகலா அணியினர் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதற்கான கடைசி நாள் வரும் 23-ஆம் தேதி ஆகும்.
இந்தத் தேர்தலில் மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்று அறிந்து கொள்வதற்காக அனைத்து தரப்பினரிடையே இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
6 முனை போட்டி
ஆர்.கே. நகர் தொகுதியில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும் போட்டியிடுகின்றனர்.
இரட்டை இலை சின்னம்
இந்நிலையில் தங்களே உண்மையான அதிமுக என்றும் தாங்களே என்றும் , இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என்றும் சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் தெரிவித்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பினரும் கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர்.
சூடு பிடித்த தேர்தல்
வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கலுக்கு பிறகு ஆர்.கே.நகர் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கின. இதனால் தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரிப்பு, அவரவர் தரப்பில் துண்டுபிரசுரங்கள் விநியோகிப்பது என தேர்தல் பணிகள் களைகட்ட தொடங்கியுள்ளன.
மதுசூதனனுக்கு ஆதரவு
வடசென்னை அதிமுகவில் மதுசூதனனுக்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. மேலும் நடுநிலையாக இருந்த அதிமுக தொண்டர்கள் பலர் தற்போது ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
நம்பிக்கை
இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என்பதில் ஓபிஎஸ் அணியினர் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளனர்.வரும் 22-ம் தேதி இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் அணியினர் உற்சாகம்
திருவொற்றியூர், மாதவரம், ஆர்.கே.நகர், ராயபுரம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களிலும் உள்ள அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் அணியில் சேர்த்து வலுப்படுத்தவும், தேர்தல் பணியில் களமிறக்கவும் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சசிகலா அணியினர் கலக்கம்
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்குத்தான் கிடைக்கும் என்று சசிகலா தரப்பினரும் நம்புவதால் சசிகலா அணி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுகின்றனர்.