சவப்பெட்டியை வைத்து அநாகரீக பிரசாரம்- கடும் எதிர்ப்பால் கைவிட்டது ஓபிஎஸ் கோஷ்டி!
தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்ட சவப்பெட்டி பிரசாரம் நிறுத்தப்பட்டது.
சென்னை: ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பில் வைத்துக்கொண்டு வாக்கு கேட்டது ஓ.பி.எஸ் அணி. இதற்கு தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து சவப்பெட்டி பிரசாரம் நிறுத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தையே அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறது ஓ.பி.எஸ் அணி. அதன் ஒரு கட்டமாக, ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பின் முன்னால் வைத்துக்கொண்டு தெரு, தெருவாக போய் வாக்கு கேட்டது ஓ.பி.எஸ் அணி.
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நடத்திய பிரசார ஊர்வலத்தில்தான் இந்த ஷாக்கிங் சம்பவம் நடந்துள்ளது. சென்டிமென்டாக ஆர்.கே.நகர் மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்பதற்காக இவ்வளவு கீழ் மட்டத்திற்கு அரசியல் நாகரீகத்தை ஓ.பி.எஸ் அணி கொண்டு சென்றுள்ளது நடுநிலையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் சவப்பெட்டி மீது தேசிய கொடி போர்த்தப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த நூதன பிரசாரத்திற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சவப்பெட்டி பிரசாரத்தை ஓபிஎஸ் அணியினர் நிறுத்தினர். தற்போது ஜெயலலிதா உருவபொம்மை உள்ள சவப்பெட்டி ஆர்.கே.நகரில் உள்ள ஓபிஎஸ் அணி பணிமனையில் வைக்கப்பட்டுள்ளது.