ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு விலை பேசிய எடப்பாடி மீது கிரிமினல் வழக்கு பதிய ஸ்டாலின் வலியுறுத்தல்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆர்.கே.நகரில் நடைபெற இருந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் ஊழல் செய்த பணத்தை வாரி இறைத்தன.
முதல்வரே தலைமை தாங்கி பணப்பட்டுவாடா
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் குழுக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி தலைமையேற்று நடத்தினார். இது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது.
ஆர்.டி.ஐ. தகவல்
இதுகுறித்து வழக்கறிஞர் வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டார். ஏப்ரல் 18ம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதுகுறித்த தகவலை தேர்தல் ஆணையம் ஆர்.டி.ஐ.யில் தெரிவித்துள்ளது.
வழக்கு பதியாதது ஏன்?
தேர்தல் ஆணையம் உத்தவிட்டு 3 மாதங்கள் ஆகியும் முதல்வர் பழனிச்சாமி மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. முதல்வர், அமைச்சர்க்ள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யத் தயங்குவது ஏன்?
திமுக வழக்கு தொடரும்
தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் முதல்வர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்றத் தவறினால், உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடரப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.