ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு... ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கில் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது.
ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரிலும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.
காவல் துறை புகார்
பணப்பட்டுவாடா தொடர்பாக ஆளும் கட்சி மீது புகார் அளித்தும் காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கறிஞர் எம்.பி. வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார்.
ராஜேஷ் லக்கானிக்கு உத்தரவு
வைரக்கண்ணனுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பதில் மனு
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு ராஜேஷ் லக்கானி இன்று உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பணப்பட்டுவாடா நடவடிக்கையில் தொடர்புடையவர்கள் மீது காவல் துறைதான் வழக்கு பதிவு விசாரணை நடத்த வேண்டும்.
சிபிஐ விசாரிக்க கோரிக்கை
இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. வழக்கு விசாரணை என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரவரம்பில் இல்லை. மேலும் காவல் துறை நடவடிக்கை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் மனுவுக்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.