ஆர்.கே நகர் திமுக வேட்பாளராக நோ சொன்ன தமிழச்சி... கிரிராஜனுக்கு வாய்ப்பு?
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக கிரிராஜன் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: ஆர்.கே. நகரில் போட்டியிட தமிழச்சி தங்கப்பாண்டியன் மறுத்து விட்டதாகவும் இதனையடுத்து திமுக வேட்பாளராக கிரிராஜனை அறிவிக்கலாமா என்று ஸ்டாலின் யோசித்து அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா போட்டியிட்டார் அவருக்கு எதிராக, தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பலம் வாய்ந்த ஜெயலலிதாவிற்கு எதிராக களமிறங்கிய அவர் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானாலும் உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். இதனால் மீண்டும் இடைத்தேர்தலை ஆர்.கே. நகர் சந்திக்கிறது.
திமுக நேர்காணல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு திமுக சார்பில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார். அப்போது, முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப்பொதுச் செயலாளர் வி.பி.துரைச்சாமி, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் கலந்துகொண்டனர். இந்த முறையும் திமுக சார்பில் போட்டியிட சிம்லா முத்துச்சோழன் விருப்ப மனு அளித்து நேர்காணலிலும் பங்கேற்றார்.
ஸ்டாலின் கேள்வி
ராயபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், காமராஜரின் உறவினர் மயூரி உள்ளிட்ட 17 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். தேர்தலில் வெற்றி பெற என்னென்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? ஆளுங்கட்சி யான அதிமுகவை எதிர்கொள்ள முடியுமா? எவ்வளவு செலவு செய்ய முடியும்? தொகுதியில் எந்த அளவுக்கு உங்களுக்கு செல் வாக்கு உள்ளது?
ஸ்டாலின் வியூகம்
அதிமுக பிளவுபட்டுள்ளதால் வெற்றிக்கனியை பறித்தே ஆகவேண்டும் என்று திமுக முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. ஆர்.கே. நகரில் யார் போட்டியிட்டாலும் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று ஸ்டாலின் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். கருணாநிதியுடன் கலந்து ஆலோசித்து வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்..
தமிழச்சி தங்கப்பாண்டியன்
ஆர்.கே. நகரில் போட்டியிட தமிழச்சி தங்கப்பாண்டியனை தொடர்புகொண்டு ஸ்டாலின் பேசினாராம். ஆனால் தனக்கு இந்தத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லை என்று கூறிவிட்டாராம். இதனையடுத்தே வேறு வேட்பாளரை யோசித்தாராம் ஸ்டாலின்.
யாருக்கு வாய்ப்பு
வடசென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு ஆசி பெற்ற வேட்பாளருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வழக்கறிஞர் கிரிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிரிராஜன் விருப்பமனு அளிக்கவே இல்லை என்றாலும் ஸ்டாலின் மனது வைத்தால் அவரை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
கருணாநிதியிடம் ஆலோசனை
வேட்பாளர் நேர்காணல் முடிந்தாலும் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்திய பின்னரே அறிவிப்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர். கே. நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்று நாளை அறிவிக்க உள்ள நிலையில் திமுக யாரை களமிறக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.