சென்னை ஆசிரியையிடம் கத்திமுனையில் கொள்ளை: நீராவி முருகன் துப்பாக்கி முனையில் கைது
சென்னை: கத்தி முனையில் ஆசிரியையை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கொள்ளையன் நீராவி முருகனை, தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
துரைப்பாக்கம், எம்.சி.என். நகரை சேர்ந்தவர் வேலம், வயது, 39. ஒக்கியம் துரைப்பாக்கம் பள்ளி ஆசிரியை. கடந்த ஆண்மு டிசம்பர் 19ஆம் தேதி, அவரது வீட்டருகே, அவரை கத்திமுனையில் மிரட்டி கொள்ளையன் ஒருவன், 14 சவரன் நகைகள், அலைபேசி ஆகியவற்றை பறித்து, இருசக்கர வாகனத்தில் காத்திருந்த தனது கூட்டாளியுடன் தப்பி சென்றான்.
இந்த காட்சிகளை கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டின் மாடியில் இருந்த படியே செல்போனில் படம் பிடித்த காட்சிகள் வாட்ஸ்-அப்பில் பரவியது.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் தடுக்க முற்படாமல் வேடிக்கை பார்த்தபடியே செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
அந்த வீடியோவில் கொள்ளையனின் முகம் தெளிவாக பதிவாகியிருந்தது. அந்த கொள்ளை தொடர்பான புகைப்படங்கள், இணையதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது.
இதனை ஆதாரமாகக் கொண்டு, கத்தி கொள்ளையர்களை பிடிக்க, உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மடிப்பாக்கம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சந்தேகத்திற்கு உரிய நபர்களின் புகைப்படங்களை, போலீசார் சோதனையிட்டதில், துரைப்பாக்கம் கத்தி கொள்ளையனின் உருவம், மிக தெளிவாக சிக்கியது.
அந்த நபர் குறித்த விவரங்களை சேகரிக்க, தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களுக்கு, அவனது புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், கத்தியை காட்டி மிரட்டியவன், நீராவி முருகன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அவனுடன் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 32 என்பவனை டிசம்பர் மாதம் 30ஆம் தேதி போலீசார், கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின்படி, தனிப்படையினர், நீராவி முருகனை, பல்வேறு மாவட்டங்களில் தேடி வந்தனர்.
தூத்துக்குடியில் கைது
தூத்துக்குடியில் நீராவி முருகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே, தனிப்படையினர், ஒரு வீட்டில் தங்கியிருந்த நீராவி முருகனை, துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த தகவலை போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இளம் வயதில் இருந்தே
நீராவி முருகன் பற்றி தனிப்படை போலீசார் கூறிய தகவல்கள்:
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ள நீராவி என்ற கிராமத்தை சேர்ந்த முருகன். தனது 10 வயது முதல், குற்றச்செயல்களில் ஈடுபட துவங்கினான். கடந்த, 2002ஆம் ஆண்டில் இருந்து, வழிப்பறி தொழிலை துவங்கினான். அவன் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல வழிப்பறி வழக்குகள் உள்ளன.
கூலிப்படையில்
பல முறை சிறை சென்ற இவன், 2008ஆம் ஆண்டு முதல், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையில் இணைந்தான். கடந்த, 2009ம் ஆண்டில், திருப்பூரை சேர்ந்த உதயசூரியன் என்ற பிரபல குற்றவாளி கொலை வழக்கில், நீராவி முருகன், முக்கிய பங்கு வகித்தான்.
கொலை வழக்குகள்
கடந்த, 2011ஆம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த அசோக் என்ற குற்றவாளியின் வட்டத்தில் சேர்ந்து, தி.மு.க., பிரமுகரான ஏ.சி.அருணா என்பவரை கொன்றான்.
பின், சென்னை, வடபழனி பகுதியில் தங்கி வழிப்பறியில் ஈடுபட துவங்கினான். மாதத்திற்கு, 50 சவரன் வரை வழிப்பறி செய்து, அதை அடகு கடைகளில் விற்று, உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்தான்.
வழிப்பறி
துரைப்பாக்கம் வழக்கில் சிக்கிய ஹரிகிருஷ்ணனுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக வழிபறியில் ஈடுபட்டுள்ளான். துவக்கத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்தபடி வழிப்பறி செய்தவன், சென்னை நகரில் வழிப்பறி அதிகரித்ததால், புது யுக்தியாக கத்தி முனை கொள்ளையில் ஈடுபட துவங்கினான். இதுபோன்று சென்னை நகரில் பலரிடம் வழிப்பறி செய்துள்ளான்.
காட்டிக்கொடுத்த புகைப்படம்
இதுநாள்வரையிலும் போலீஸ் கையில் சிக்காமல் நழுவி வந்த நீராவி முருகன், ஆசிரியையிடம் நகை பறித்த போது செல்போனில் சிக்கி தற்போது வகையாக மாட்டிக்கொண்டான்.