சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு கொடுத்த ராக்கெட் ராஜா மீது மேலிடம் கடுப்பு.. என்கவுண்டருக்கு திட்டமா?
நெல்லை: நாடார் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவை கைது செய்துவிட வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று நினைத்து நெல்லை மாவட்டத்தில் அவரது சொந்த ஊருக்கு விரைந்த காவல்துறைக்கு ஏமாற்றமே கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச பண்ணையார், 13 வருடங்கள் முன்பு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னையில் வைத்து போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து அடுத்த மக்களவை தேர்தலிலேயே, திமுக சார்பில் களம் கண்ட வெங்கடேச பண்ணையார் மனைவி ராதிகா செல்வி எம்.பியானார்.
இந்நிலையில், வெங்கடேச பண்ணையாருக்கு நெருக்கமான, நாடார் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். தலைமறைவாக இருந்தபடியே வேண்டியற்றை சாதித்தும் வருகிறார் ராக்கெட் ராஜா.
கோபப்படுகிறார்களாம்
இந்நிலையில், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டபிறகு, சசிகலா புஷ்பாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ராக்கெட் ராஜா கையிலெடுத்துள்ளார். இதனால் ஜெயலலிதாவுக்கு 'நெருக்கமானவர்கள்' கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கடேச பண்ணையாரை போலவே, ராக்கெட் ராஜாவையும் என்கவுண்டரில் கொல்ல போலீசாருக்கு அவர்கள் சமிக்ஞை கொடுப்பதாக கூறப்படுகிறது.
என்கவுண்டர் திட்டம்
ராக்கெட் ராஜா தலைமறைவாக உள்ள நிலையில், அவரை என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சுங்க இலாகா அதிகாரியும், ராக்கெட் ராஜாவின் சகோதரருமான சிவனேசன் குற்றம் சாட்டிவருகிறார்.
போலீஸ் ரெய்டு
இந்நிலையில் நேற்று இரவு ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டார்கள். ஆனால் ராஜா இல்லாததால், அவருக்கு சொந்தமான இரண்டு கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைமறைவு
ராக்கெட் ராஜாவை கைது செய்யவே, அவரது சொந்த ஊரான, நெல்லை மாவட்டம், திசையன்விளையடுத்த ஆனைகுடிக்கு போலீசார் சென்றுள்ளனர். ஆனால், போலீசார் வருவதை ராக்கெட் ராஜா முன்கூட்டியே அறிந்து கொண்டு, அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பிவிட்டார் என கூறப்படுகிறது.