தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு தர மத்திய அரசு முடிவு?
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்புத் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மாநிலத்தின் புதிய ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரும் சட்டமேலவை தலைவருமான சங்கரமூர்த்தி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் காவிரி பிரச்சனையை முன்வைத்து சங்கரமூர்த்தியை ஆளுநராக நியமிக்க ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
தெலுங்கானாவுக்கு சங்கரமூர்த்தி
இதனிடையே சங்கரமூர்த்தியை தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கவே மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகத்தான் சங்கரமூர்த்தியை அமித்ஷா டெல்லிக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
எதுக்கு வம்பு
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக நரசிம்மன் இருந்து வருகிறார். இதனாலேயே சங்கரமூர்த்தியை தெலுங்கானா ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் காவிரி நீர் பிரச்சனை இருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமித்தால் தமிழகத்தில் 'ஆளுநர் மாளிகை' முற்றுகைப் போராட்டங்கள் தொடர் கதையாகிவிடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
நீட்டிப்பு கோரிய ஜெ.
அதே நேரத்தில் தமிழக ஆளுநராக இருக்கும் ரோசய்யாவுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தாராம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ரோசய்யா தம்முடைய பதவி காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் மோதல் போக்கு எதுவும் கடைபிடிக்கவில்லை. ஆகையால்தான் அவரே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புகிறாராம்.
ஏற்ற மத்திய அரசு
மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் அதிமுகவின் ஆதரவு தேவை என்பதால் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு தர ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.