கிராசிங் நிலையமாகும் மேலப்பாளையம் ரயில் நிலையம்.. பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு
திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த மேலப்பாளையம் ரயில் நிலையம் கிராசிங் நிலையமாக விரிவாக்கம் செய்ய பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி - நாகர்கோவில் வழி தடத்தில் உள்ள ரயில்நிலையங்களான மேலப்பாளையம், செங்குளம், நான்குநேரி, வள்ளியூர், பணக்குடி ரயில்நிலையங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த வழி தடத்தில் உள்ள சிறிய ரயில் நிலையங்களாக பணக்குடி, செங்குளம், மேலபாளையம் போன்ற ரயில் நிலையங்கள் உள்ளன.
இதை போல் பெரிய கிராசிங் ரயில் நிலையங்களாக வள்ளியூர், ஆரல்வாய்மொழி, நான்குநேரி ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழி தடத்தில் பயணிகள் ரயில்கள் தற்போது 90 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழி தடத்தில் ரயில்கள் இயக்கம் நெருக்கடி தற்போது 110 சதவிகிதமாக உள்ளது.
அதிக அளவில் புதிய ரயில்கள் இந்த தடம் வழியாக இயக்க வேண்டும் என்றால் புதிய கிராசிங் நிலையங்களை உருவாக்க வேண்டும். இது மட்டும் இல்லாமல் கிராசிங்காக ரயில்கள் ஒரு சில ரயில்நிலையங்களில் அதிக அளவில் நிறுத்தி வைப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு கிராசிங் நிலையங்களை உருவாக்குவதால் பயணிகளுக்கு பயண நேரம் கணிசமான அளவில் குறையும்.
திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் மார்க்கம் பயணிக்கும் போது திருநெல்வேலியிருந்து 3.60 கி.மீ பகுதியை அதாவது தாமிரபரணி ஆற்றை கடந்து சிறிய தூரத்தில் மேலப்பாளையம் ரயில் நிலையம் உள்ளது. இதற்கு அடுத்ததாக செங்குளம் ரயில் நிலையம் 11.14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. செங்குளம் ரயில் நிலையம் தற்போது கிராசிங் ரயில் நிலையமாக உள்ளது. செங்குளத்துக்கு அடுத்து 14.74 கி.மீ தூரத்தில் திருநெல்வேலி ரயில் நிலையம் கிராசிங் ரயில் நிலையமாக உள்ளது.
திருநெல்வேலியை அடுத்த முதல் ரயில் நிலையமான மேலப்பாளையம் ரயில்நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் ரயில்வேதுறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த நிலையத்தை 7.69 கோடிகள் செலவில் இரண்டு வழி இருப்புபாதைகள் கொண்ட கிராசிங் நிலையமாக மாற்ற திட்ட கருத்துரு ரயில்வே வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ரயில்வே வாரியம் மேலப்பாளையம் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்டதும் பல்வேறு கட்டங்களாக நிதி ஒதுக்கப்பட்டு வந்தது.
இதனிடையே கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டதால் இனி தெற்கு ரயில்வே உடனடியாக இதற்கான ஒப்பந்தபுள்ளி கோரப்படும்; பணிகளை தொடர்ந்து செய்யும். அதை தொடர்ந்து இந்த பணிகள் ஆறு மாத காலத்துக்குள் துவங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
மொத்த திட்ட மதிப்பீடு 7.69 கோடிகள்
2010-11 ஒதுக்கீடு =4 லட்சங்கள்
2011-12 ஒதுக்கீடு =14.3 லட்சங்கள்
2012-13 ஒதுக்கீடு =10 லட்சங்கள்
2013-14 ஒதுக்கீடு =2.28 கோடிகள்
2014-15 ஒதுக்கீடு =10 லட்சங்கள்
2015-16 ஒதுக்கீடு =1 கோடி
வேண்டிய தொகை =4.3 கோடிகள்
இந்த பணிகள் முடிக்கப்படும் போது மேலப்பாளையம் ரயில் நிலையம் அனைத்து வசதிகளும் கொண்ட ரயில் நிலையமாக திகழும். தற்போது இந்த ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிலையத்தில் நடைமேடை வசதிகள் கூட இல்லாமல் வெறும் ரயில்நிலைய பலகை மட்டுமே தற்போது உள்ளது.
இந்த ரயில்நிலையத்தில் குறைந்தபட்ச பயணிகளுக்கு தேவையாக வசதிகளான 760 மி.மி உயரம் கூடிய நடைமேடை, ரயில் நிலைய அலுவலகம், குடிதண்ணீர் வசதி, நடைமேடை மேற்கூரை, கணிப்பொறி முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வு அறை, நடைமேடையில் பயணிகளுக்கு தேவையான இருக்கைகள், இரவு நேரங்களில் விளக்குகள், கழிப்பிட வசதி போன்ற வசதிகளை இந்த பணிகளுடன் சேர்த்து செய்ய வேண்டும் என்ற பயணிகள் விரும்புகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பணிகளை உடனடியாக துவங்கி வெகு விரைவில் முடிக்க வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.