அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ250 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
அவினாசி அத்திக்கடவு திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் கிடக்கும் அத்திக்கடவு திட்டத்திற்கு 2017-18 பட்ஜெட்டில் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் அறிவித்தார்.
2017-18ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீண்ட நாள் கோரிக்கையான அவினாசி அத்திக்கடவு திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஜெயலலிதா இருக்கும் போதே சட்டசபையில் திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், அந்த வழியை பின்பற்றி திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்களுக்கு முன் உறுதியளித்தார். அதன்படி பட்ஜெட்டில் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பதால் அதற்கான முயற்சிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.