ரூ.200க்கு ஆசைப்பட்டு இந்தியன் வங்கியில் எடுத்த ரூ.4.4 லட்சத்தை பறிகொடுத்த விவசாயி...
விழுப்புரம்: வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தபோது விவசாயியை திசை திருப்பி அவரிடம் இருந்த ரூ.4.40 லட்சம் பணத்தை மர்மநபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் திருக்கோயிலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணத்தை பறிகொடுத்த நபரின் பெயர் கோபால் என்பதாகும். இவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுரை சேர்ந்தவர். விவசாயத் தொழில் செய்து வரும் கோபால் தனது மகனின் மேற்படிப்பு செலவுக்காக விவசாய நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை திருக்கோயிலூர் இந்தியன் வங்கியில் சேமித்து வைத்திருந்தார்.
பிளஸ் டூவில் 1135 மதிபெண் பெற்ற கோபாலின் மகனுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து திருகோயிலூர் இந்தியன் வங்கியில் இருந்த 4.40லட்ச ரூபாயை நேற்று கோபால் எடுத்து கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தின் முன்பக்க கவரில் பணத்தை வைத்துவிட்டு திரும்பியுள்ளார்.
கோபாலின் அருகில் வந்த மர்ம நபர் ஒருவர், 200 ரூபாய் கீழே கிடக்கிறது அது உங்களுடையதா? என்று கேட்டுள்ளார். உடன் கோபால் பணத்தை எடுக்க குனிந்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர், கோபால் வண்டியில் வைத்திருந்த 4.40 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி உள்ளார்.
என்ன நடக்கிறது என்பதை அறிந்து சுதாரித்த கூச்சல் போட்டார். அதற்குள் அந்த மர்ம நபர், தனக்காக தயாராக காத்திருந்த வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளார். பணத்தை பறிகொடுத்த கோபால் உடனே போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட திருக்கோயிலுர் போலீசார், வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு
இந்த நூதன திருட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருக்கோயிலூர் டி.எஸ்.பி. கீதா, கோபால், கீழே கிடந்த 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு தனது பணத்தை இழந்துள்ளார். இது போன்ற நூதன திருட்டு ஆங்காங்கே பல முறை நடைபெற்று வருவதை ஊடகங்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வந்தும் இதுபோல் பலர் தங்களது பணத்தை ஏமாந்து இழக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த கொள்ளையரை பிடித்து கோபாலின் பணத்தை மீட்டுவிடுவோம் என்றார்.
பாதுகாப்பு இல்லை
அந்த வங்கியில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டிருந்தாலும், முன்பக்கத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் அந்த கொள்ளையனை உடனே அடையாளம் காண முடியவில்லை. தேசியமயமாக்கப்பட்ட அந்த வங்கியின் முன்பக்கம் சிசிடிவி கேமரா இல்லாததும், செக்யூரிட்டி இல்லாததும் ஆச்சரியமாக உள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகனின் படிப்புக்காக நிலத்தை விற்று சேமித்த பணத்தை 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு விவசாயி பறிகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.