தமிழகத்தில் குட்கா விற்க ரூ. 40 கோடி லஞ்சம்... ஐ.டி. ரெய்டில் அம்பலம்
தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை போதைப் பொருட்கள் விற்பனை இப்போது தாராளமாக நடக்கிறது. இதற்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஐ.டி. ரெய்டில் தெரியவந்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுக்க குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது.இதற்காக ரூ.40 கோடி வரை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஐ.டி. ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குட்கா விற்பனையை சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் லஞ்சம் பெற்றது வருமான வரித்துறை சோதனையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும்போதே வெளியிடப்படப்பட்டது. அப்போது பெயரளவுக்கு மட்டும் கடைப்பிடிக்கப்பட்ட உத்தரவு பின்னர் குப்பையில் வீசப்பட்டுள்ளது.
தடையை மீறி பல இடங்களில் இந்தப் பொருட்கள் விற்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்தன. குறிப்பாக பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலேயே குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை இப்போதும் பரபரப்பாக நடந்துவருகிறது.
முன்னாள் கமிஷனர் கடிதம்
இந்நிலையில், சென்னையில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர் புகார்கள் எழுந்தன. அதன்பின்னர் முன்னாள் மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
சட்ட விரோத விற்பனை
அந்தக் கடிதத்தில், ‘மாவா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் சென்னையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதில், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே இது பற்றி விசாரிக்க வேண்டும்.
2016ல் அதிரவைத்த செய்தி
இது தொடர்பாக தனி விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்தால் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவரும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடித செய்தி கடந்த 2016 டிசம்பரில் வெளியாகி தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு விசாரணை
ஜார்ஜின் கடிதத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுப்பியது. அதனடிப்படையில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆவணங்களில் சிக்கின
சென்னையில் உள்ள குட்கா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தனர். அந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகல்களை வருமானவரித் துறையிடம் ஊழல் தடுப்பு பிரிவினர் கேட்டிருந்தனர். அதன்படி, அண்மையில் ஆவணங்களை வருமான வரித்துறையினர் வழங்கியிருந்தனர்.
போலீசுக்கு லஞ்சம்
கடந்த 2016 ஜூலை 8-ம் தேதி வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையின்போது பல ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் குட்கா விற்பனையை அனுமதிக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது குறித்த கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை இல்லை
குட்கா உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் மாதவராவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் மாநில அரசோடு தொடர்புடைய பல் வேறு நபர்களுக்கு பணம் செலுத் தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அவ்வாறு பணம் பெற்றவர்களிடம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் இதுவரை விசாரணை நடத்தவில்லை.
மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள்
குட்கா நிறுவன தரப்பினர் அளித்துள்ள தகவல்கள்படி, சென்னை காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர் ஒருவர், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு பணம் செலுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தமிழக போலீஸ் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
நிலுவையில் உள்ள அறிக்கைகள்
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் இந்த விவகாரம் குறித்த அறிக்கை டிஜிபி அலுவலகம் மூலம் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகள் நிலுவையில் உள்ளன.
ரூ. 40 கோடி கொடுக்கப்பட்டது
கடந்த 2015-16-ம் ஆண்டில் தீபாவளி போனஸ், கிறிஸ்துமஸ் போனஸ் மற்றும் மாதம்தோறும் செலுத்தப்படும் தொகை என மொத்தமாக சுமார் ரூ.40 கோடி வரை வழங்கியுள்ளதாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்தனர். போதைப் பொருட்கள் விற்க போலீஸ் லஞ்சம் வாங்கியுள்ளது சமூக ஆர்வலர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.